06/Jun/2021 04:18:42
புதுக்கோட்டை, ஜூன் 6: தனியார் பாலை வாங்குவது தெரிந்தே கிணற்றில் விழுவதைப் போன்றது என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் ஆவின் பாலகத்தினை பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் சா.மு.நாசர் (6.6.2021) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்விற்கு பின்னர் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தனியார் பாலில் பல கோணங்களில் பல விதங்களில் கலப்படம் இருக்கிறது. நல்லது கெட்டது எது என்று தெரிந்த நாம் தரமான ஆவின் பாலை வாங்க வேண்டும். ஏன் கலப்படமான பொருளை வாங்கி தெரிந்தே கிணற்றில் விழவேண்டும்.
தனியார் பாலை வாங்குவது மக்கள்
தவறுதான். தனியார் பால் கலப்படம் குறித்து
நடவடிக்கை எடுத்து வருகிறோம். தகவல் கிடைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலின் விலை மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.220 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. விவசாயிகளுக்கு பால் கொள்முதல் விலையை
உயர்த்துவது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார்.
தமிழகஅரசால் ஆவின் நிறுவனத்தின மூலம் தயாரிக்கப்படும்
ஆவின் பால் கலப்படமில்லாதது தாய்ப்பாலுக்கு நிகரானது. அதில் செய்யக்கூடிய ஸ்வீட்,
நெய்
உள்பட
அனைத்து பொருள்களுமே எந்தவித கலப்படமில்லாத சுத்தமானவை. எனவே தாய்ப்பாலுக்கு இணையான ஆவின் பாலை மக்கள் வாங்க வேண்டும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை.
பால்வளத்துறை ஆணையர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குனர் ஆர்.நந்தகோபால், வழக்குரைஞர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், ஆவின் மேலாளர் பாலபூபதி, க.நைனாமுகமது, த.சந்திரசேகரன், மீனாட்சிசுந்தரம், லியாகத்அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.