logo
ஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்

ஈரோட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்

31/May/2021 05:11:38

ஈரோடு, மே: மற்ற மாவட்டங்களில் தொற்று குறைந்து வரும் நிலையில்  மாநிலத்தில் 3-ஆவது இடத்தில் ஈரோடு மாவட்டத்தில்  பாதிப்பு இருந்து வருவது மாவட்ட மக்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையடையச்செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2-ஆவது  அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 35 ஆயிரமாக இருந்து வந்த நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்து ஞாயிற்றுக்கிழமை  28 ஆயிரமாக குறைந்துள்ளது.

சென்னையில் தினசரி பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஆனால் மேற்கு மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் போன்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு  தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டம் தொடர்ந்து 5-ஆவது நாளாக தினசரி பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது.தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. கோவை சென்னை போன்ற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு அதே எண்ணிக்கையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

 ஈரோடு மாவட்டத்தில் நேற்று இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக ஒரே நாளில் 1784 பேருக்கு தொற்று ஏற்பட்டுள் ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 914 ஆக அதிகரித்துள்ளது.  ஈரோடு மாநகர் பகுதியில் மட்டும் 400 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மீதமுள்ள 1,384 பேர் கிராமப்புற பகுதியை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  25 வயது இளம்பெண் உள்பட 22 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. 941 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 39 ஆயிரத்து 367 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15, 207 ஆக அதிகரித்துள்ளது.

மாநகர் பகுதியை விட தற்போது கிராமப்புற பகுதியில் குடும்பம் குடும்பமாக மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் கிராமப்புற பகுதியில் போதிய விழிப்புணர்வு மக்களிடம் இல்லாதது தான்.

கிராமப்புற பகுதியில் மக்கள் ஒன்று கூடி மோ கவசம் அணியாமல் பேசி வருகின்றனர். இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகின்றனர்திருமணம், இறப்பு போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் முக கவசம்  அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும்  பங்கேற்று வருகின்றனர்.

கிராமப்புற பகுதியில் இயங்கும் நிறுவனங்களில் பல்வேறு இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வந்து வேலை பார்த்து வருவதால் அதன் மூலமும் தொற்று வேகமாக பரவி வருகிறது. கிராமப்புற பகுதி மக்களுக்கு சளி காய்ச்சல் இருந்தால் அருகிலிருக்கும் மருந்தகங்கள் மற்றும் கிளினிக்குகளுக்கு  சென்று  மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் தற்காலிகமாக சளி ,காய்ச்சல்கள் இல்லாமல் சென்றாலும்.

ஒரு வாரம் கழித்து அந்த நபர்களுக்கு கடுமையான சளி காய்ச்சல் ஏற்பட்டு பின்னர் மருத்துவமனைக்கு செல்லும் போது தொற்று ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு விடுகிறது.இதேபோல் கொரோனா பரிசோதனை செய்துவிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமையில் இருக்காமல் வெளிய காய்கறி மளிகை பொருட்கள் வாங்கச் செல்வது நண்பர்களுடன் பேசுவது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

அந்த நபருக்கு  தொற்று  உறுதி செய்ய பட்டால் அந்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களால் கிராமப்புற பகுதிகளில் தொற்று அதிகரித்து வருகிறது. இதையடுத்து  கிராமப்புற பகுதிகளில் சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம ஊராட்சிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வெளி நபர்கள் உள்ளே வர  தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.முழு ஊரடங்கை  மதிக்காமல் இன்னமும் மக்கள் வெளியே வாகனங்களில்  சுற்றி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளிலும், 42 கூடுதல் சோதனை சாவடிகளிலும் 24 மணி நேரமும் போலீசார் தீவிரமாக  வாகன தணிக்கையில் ஈடுபட்டும், ஈரோடுக்கு  வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். -பதிவு பெற்ற வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதுவும் கடுமையான சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. - பதிவு இல்லாமல் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன.

Top