29/May/2021 02:37:23
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரிமாநகர் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்களைத்தேடி கோவிட் தடுப்பூசி முகாம் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, சிவகங்கை மக்களவைத்தொகுதி உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர் முன்னிலையில் சட்டம் நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (29.5.2021) சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் எஸ். ரகுபதி கூறியதாவது: முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொன்னமராவதி அரிமாநகர் லயன்ஸ் மேல்நிலைப்பள்ளியில் மக்களைத்தேடி கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கோவிட் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க பொது மக்கள் அனைவரும் தவறாது கோவிட் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் வகையில் மக்களை தேடி தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் தடுப்பூசி போடும் இடங்களை தேடி செல்வதை தவிர்த்து பொது மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக ஊராட்சி வாரியாக தடுப்பூசி போடும் பணியினை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. எனவே பொது மக்கள் இது போன்ற கோவிட் தடுப்பூசி முகாம்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள 650 படுக்கைகளிலும் ஆக்ஸிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் இங்கு தினமும் 500 கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு காய்ச்சல் தலைவலி போன்ற கோவிட் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைபடி உரிய சிகிச்சை மேற்கொண்டால் பொது மக்கள் கோவிட் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள முடியும்.
கோவிட் தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் புதுக்கோட்டை மாவட்டமும் ஒன்றாகும். இதற்கு காரணமான மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள். எனவே பொது மக்கள் அனைவரும் அரசின் கோவிட் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி து தங்களை பாதுகாத்துகொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் எஸ். ரகுபதி.
இதனை தொடர்ந்து திருமயம் வட்டம், ராங்கியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் தடுப்பூசி மருத்துவ முகாமினை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வில், பொது சுகாதாரத் துணை இயக்குநர் கலைவாணி, காசி நாட்டுக்கோட்டை நகர சத்திர மேலாண்மைக் கழக தலைவர் வழக்குரைஞர் பழ.ராமசாமி, செயலாளர் லெட்சுமணன், செந்தூரான் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராம. வயிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.