logo
ஈரோட்டில் ஊரடங்கை மீறி சுற்றியதாக ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு செய்து போலீஸார்  நடவடிக்கை

ஈரோட்டில் ஊரடங்கை மீறி சுற்றியதாக ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு செய்து போலீஸார் நடவடிக்கை

19/May/2021 01:51:39

ஈரோடு, மே: ஈரோட்டில் ஊரடங்கை மீறி சுற்றியதாக ஒரே நாளில் 1086 வழக்குகள் பதிவு செய்து போலீஸார்  நடவடிக்கை எடுத்தனர்.

 தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த இந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், அதைத் தொடர்ந்து வந்த ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

எனினும் கொரோனா தாக்கம் குறையாததால் தமிழகத்தில் கடந்த 10 - ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும் முழு ஊரடங்கு பொருட்படுத்தாமல் மக்கள் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்தனர்.

ஈரோடு மாவட்டத்திலும் மக்கள் வாகனங்களில் தங்கள் இஷ்டம் போல் சுற்றி திரிந்தனர். போலீசார் நிறுத்தி காரணம் கேட்டால் ஏதாவது காரணங்களைச்  சொல்லி சென்று விடுகின்றனர். இதையடுத்து முழு ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டது. குறிப்பாக ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து மாவட்ட  எஸ்பி  தங்கதுரை உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 9 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 700- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கின் போது தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்தனர். செவ்வாய்க்கிழமை ஒரு நாள் முழுவதும் ஈரோடு மாநகர் பகுதியில் முழு ஊரடங்கின் அப்போது தேவையில்லாமல் ஏராளமான இருசக்கர வாகனங்கள் கார்களில் சுற்றித்திரிந்தனர்.

டவுன் டிஎஸ்பி ராஜூ தலைமையில் மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க். மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு பெருந்துறை ரோடு உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனையிட்டனர்.

இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை  பார்வையிட்டு ஆய்வு செய்தார். செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றியதற்கும்,முக கவசம் உட்பட அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் வந்ததாகவும் என ஒரே நாளில் 1,086 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும் 152 இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தொடர் அதிரடி நடவடிக்கையால் மக்கள் சுற்றுவதை சற்று குறைத்துள்ளனர்.

Top