10/May/2021 04:34:42
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பாதுகாப்பு பணியில் 700 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 42 சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முழு ஊர் அடங்கும் போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள 13 நிலையான சோதனை சாவடிகளில் போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப்போல் கூடுதலாக 42 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு இரண்டு ஏடிஎஸ்பி, 9 டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பஸ் நிலையம், ஸ்வஸ்திக்கார்னர், மேட்டூர் ரோடு, சென்னிமலை ரோடு, பெருந்துறை ரோடு,ஜி எச் ரவுண்டானா, வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் என மக்களுக்கு அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய ஒரு சிலரை பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
சிலர் மீது வழக்குப்பதிவு செய்து இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதேசமயம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் போலீசார் அனுமதித்தனர். இதேபோல் கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன.
இதேபோல் பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, பண்ணாரி சோதனைச்சாவடி, தாளவாடி மாநில எல்லை சோதனை சாவடிகளில் செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. முழு ஊரடங்கி மீறியும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே வாலிபர்களை தேவையில்லாமல் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.