logo
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை  1.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி: சுகாதாரத் துறையினர் தகவல்

08/May/2021 11:14:25

 

ஈரோடு, மே:ஈரோடு மாவட்டத்தில் இதுவரை  1.46 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக  சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும்ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் 80 வயது மேற்பட்ட முதியவர்கள், மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குள் பட்ட இணைய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

இதையடுத்து கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்கின்றனர். அரசு மருத்து வமனை , ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில்  கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

 

இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

முதலில் ஒரு வாரத்திற்கு 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நேற்று  வரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 1 லட்சத்து 46 ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர் என்றனர்.

Top