06/May/2021 11:13:14
ஈரோடு, மே : ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 3 டன் ஆக்சிஜன் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் தேவையானவர்களுக்கு கிடைக்கச்செய்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் சி. கதிரவன் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்துக்கு தேவையான ஆக்சிஜன் இருப்பில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வகையிலும் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கில் இருக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை மத்திய, மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டும்.
திரவ
ஆக்சிஜன் சேமிப்பு கிடங்குகள் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்
அதை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாயு ஆக்சிஜனை விட,
திரவ ஆக்சிஜன் நல்லது. இதுபோல் தற்போது
எங்கெல்லாம் ஆக்சிஜன் இருப்பில் உள்ளது என்பதையும் கணக்கெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தீயணைப்பு படையினர் தனியார் மருத்துவமனை பட்டியல் பெற்று ஆக்சிஜன் சேமிப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்துக்கு கூடுதலா 3 டன் திரவ ஆக்சிஜன் கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் கதிரவன்.
ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க வேண்டும்: தனியார் மருத்துவ
மனைநிர்வாகிகள் கோரிக்கை:
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும் நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 37 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதில் அரசுக்கு 32 டன் வழங்கப்படுகின்றது. மீதமுள்ள 5 டன் திரவ ஆக்சிஜன் ஈரோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.