26/Apr/2021 07:46:56
புதுக்கோட்டை, ஏப்:தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஊதிய உயர்வு ஒருசில சங்கங்களில் இன்னும் வழங்கப்படாத நிலையில் ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்: தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஊதிய உயர்வு ஒருசில சங்கங்களில் இன்னும் வழங்கப்படாத நிலையில் ஊதிய உயர்வு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும். மருத்துவப்படி அரசு அறிவித்த ரூபாய் 300 வழங்காமல் இருக்கும் பணியாளர்களுக்கு வழங்க பரிந்துரை செய்தல் வேண்டும்.
பணிவரன்முறை செய்த பணியாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இன்னும் அவர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கவில்லை உடனே பரிந்துரை செய்து பணி நிரந்தர ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவர் ம. கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கருப்பையா வரவேற்றார்.மாவட்ட துணைத்தலைவர் சிங்காரவடிவேல், மாவட்ட இணைச்செயலாளர் ஆதிசங்கரர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோரிக்கைகளை விளக்கி வட்டத்தலைவர் வி. சுப்பிரமணியன், துணைத்தலைவர் வி. ரத்தினம், திருமயம் வட்ட துணைத்தலைவர் டி. ரகுவரன், விராலிமலை வட்டத்தலைவர் கந்தசாமி, அறந்தாங்கி வட்டத்தலைவர் வி. ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நாராயணன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.