09/Apr/2021 06:01:12
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் 6 நாள்களுக்குப்பின் பிளஸ் 2 மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ் - 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 44 ஆயிரத்து 641 மாணவ-மாணவிகள் பிளஸ்- 2 பொதுத்தேர்வு எழுத உள்ளார்கள்.
வரும் மே 3-ஆம் தேதி பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அதற்குள்ளாக பாடத்திட்டங்கள் நடத்தி முடித்து செய்முறை தேர்வுகளை நடத்துவதில் பள்ளிகள் தீவிரமாக உள்ளன.
இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தோற்று பரவுவதால் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில் சட்டசபை தேர்தல் மற்றும் புனித வெள்ளிக்காக கடந்த வாரம் 3 -ஆம் தேதி முதல் பிளஸ்- 2 மாணவ மாணவிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் வாக்குச் சாவடிகளாக செயல்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் வாக்குச்சாவடி மையங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்களித்தனர்.
இதனால் பள்ளிகளை சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது இதனால் வாக்குசாவ டிகளாக செயல்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணி கடந்த இரண்டு நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது.
கடந்த இரண்டு நாட்களாக தலைமையாசிரியர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து இந்த பணியை பார்வையிட்டனர். வகுப்பறைகள் ,கழிவறைகள் இருக்கைகள், கைப்பிடிகள், போன்றவற்றில் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று பிளஸ் - 2 வகுப்பு தொடங்கியது. வகுப்புக்கு வரும் முன் நுழை வாயிலில் கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தப்படுத்தப் பட்டன. மாணவ மாணவிகளின் உடல் வெப்ப நிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கான செய்முறை தேர்வுகள் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 44 ஆயிரத்து 641 மாணவ மாணவிகள் இந்த செய்முறை தேர்வுகளை எழுதுகின்றனர்.