07/Apr/2021 04:39:30
புதுக்கோட்டை, ஏப்: வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், கந்தர்வகோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டிருந்த 1,902 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு ஏப்ரல்6 -ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை நடந்தது. வாக்குபதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே. 2 ஆம் தேதி புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் இருந்து இந்த மையத்திற்கு நேற்று (6.4.2021) இரவு 9 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சிசிடிவி காமிரா மூலம் டிஜிட்டல் திரையில் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆயுதம் தாங்கிய மத்திய ஆயுதப்படை போலீஸார் உள்பட நூற்றுக்கும் மேல்பட்ட போலீஸார் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதன்கிழமை காலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எல், பாலாஜி சரவணன், மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஜி. ரகு, வேட்பாளர்களின் முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் அறைகள் சீல் வைக்கப்பட்டன.