07/Apr/2021 06:21:43
ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தனக்கு தெரியாமல் பதிவு செய்யப்பட்ட வாக்கை எதிர்த்து சர்கார் திரைப்படத்தில் வரும் சம்பவத்தைப் போல 49-பி பிரிவின் கீழ் வாக்களித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவியாளர் ஜனநாயகக் கடமையாற்றியுள்ளார்.
சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32) இவர் ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.
வழக்கம் போல இந்தத்தேர்தலிலும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெஞ்சனூர் அரசு பள்ளியில் பாகம் எண் 128, வரிசை எண் 285-ல் சரவணன் வாக்களிக்க சென்று தனது அடையாள அட்டையை காண்பித்துள்ளார். அதற்கு அங்குள்ள தேர்தல் பணியாளர்கள் உங்களது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்து விட்டார் என கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சிய டைந்த சரவணன் எனது வாக்கை வேறு ஒருவர் எப்படி பதிவு செய்யலாம் என கேட்டு வாக்குவாதம் செய்தார். இதனால் வாக்குச்சாவடியில் காத்திருந்த வாக்காளர்களிடையே பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து சரவணன் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும் தவறாமல் வாக்களித்து வருகிறேன்.வாக்கு பதிவு செய்ய வந்த போது எனது வாக்கை மற்றொருவர் பதிவு செய்துள்ளதைக் கேள்விப்பட்டவுடன் மிகுந்த வேதனை அடைந்தேன்.
தேர்தல் அதிகாரிகள் எனது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பதில் மிகவும் மெத்தனமாக நடந்து கொண்டனர். பின்பு நான் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்று விவரத்தைக் கூறி அடையாள அட்டையை காண்பித்த பிறகே என்னை சமாதானம் செய்து தேர்தல் சட்ட பிரிவு 49 பி - ன் படி படிவம் 17 -பி யை பூர்த்தி செய்து டெண்டர் ஓட்டு போட அனுமதித்தனர் என்றார்.