logo
ஈரோடு பெரியார்நகர் ஓடைப்பகுதியில் சமுதாய கூடம் திறக்கப்படும்: தமாகா வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி

ஈரோடு பெரியார்நகர் ஓடைப்பகுதியில் சமுதாய கூடம் திறக்கப்படும்: தமாகா வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி

29/Mar/2021 07:42:40

 ஈரோடு, மார்ச்: ஈரோடு பெரியார்நகர் ஓடைப்பகுதியில் சமுதாய கூடம் திறக்கப்படும் என்று  தமாகா வேட்பாளர் யுவராஜா வாக்குறுதி  அளித்தார்.

 ஈரோடு கிழக்கு தொகுதி  அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் தமாகா  வேட்பாளர் எம்.யுவராஜா, ஈரோடு பெரியார் நகர், காந்திஜி சாலை, பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை போன்ற பகுதிகளில், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து  பிரசாரம் செய்தார்.

அப்பகுதி வாக்காளர்களிடம், வேட்பாளர் யுவராஜா பேசியதாவது:  ஈரோடு பெரியார் நகர் ஓடை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட சமுதாய கூடம், விரைவில் நிறைவு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். பெரியார் நகர் ஆர்ச் முதல் ஆர்ச் வரையிலும், 80 அடி சாலை பகுதியிலும் மக்கள் வசதிக்கான மினி பஸ் இயக்கம் உறுதி செய்யப்படும்.

மழை நேரத்தில் ஸ்டோனி பிரிட்ஜ் பகுதி ஓடையில் வெள்ளமும், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் ஏற்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இங்கு நடக்கும் பணிகளுடன் கூடுதல் பணி மேற்கொண்டு, அங்குள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தருவேன்.

பழைய ரயில்வே ஸ்டேஷன் சாலை விரிவாக்கம் செய்து, தேவையான மின் விளக்கு வசதி ஏற்படுத்தி, அங்குள்ள இரு ரயில்வே கேட் பகுதியில் உயர் மட்ட மேம்பாலம் அல்லது கீழ்பகுதியல் நுழைவு பாலம் ஏற்படுத்த முயற்சி மேற்கொள்வேன். இதனை நிறைவேற்ற, இரட்டை இலை சின்னத்துக்கு  வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார் அவர்.

Top