27/Mar/2021 09:51:07
புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில் திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட 70 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து சனிக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகிறார். அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம் தொகுதிக் குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம், திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 33 ஊராட்சி களைச் சேர்ந்த 200 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் காலை 7 மணியளவில் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து பிரசாரத்தைத் தொடங்கி கிராம மக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது: சட்டமன்ற உறுப்பினருக்காக கிடைக்கும் சம்பளத் தொகை முழுவதும் ஏழை பெண்கள் திருமணத்திற்கு முதியவர்களின் மருத்துவ செலவுக்கும், மாணவர்களின் கல்விக்காகவும் செலவழிப்பேன்.
திமுக ஆட்சி காலத்தில் பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு ஒரு ரூபாய் கூட வழங்கியதில்லை. ஆனால் அதிமுக அரசு கடந்த பொங்கல் பண்டிகைக்காக ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ.2500 வழங்கியது மேலும் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்கள் வழங்கியது.
தற்போது உள்ள தேர்தல் அறிக்கையில் வீட்டுக்கு ஒரு வாஷிங் மெஷின், சோலார் அடுப்பு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அதிமுக அரசு மீண்டும் அமையும் வகையில் இரட்டை இலைச் சின்னத்துக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து, தெற்கு தாழம்பட்டி, வடக்கு தாழம்பட்டி, கோவில்பட்டி, கோட்டூர், மலம்பட்டி, நற்சாந்துபட்டி, மலையக்கோவில் விளக்கு, மலையலிங்கபுரம், பூலாம்பட்டி, பொன்னனூர், குலமங்கலம், ராராபுரம், மேலப்பனையூர்.
பனையபட்டி, குழிபிறை, ஆத்தூர், மிதிலைப்பட்டி, ராங்கியம், வடசேரிப்பட்டி, ஏரணிப்பட்டி, குருவிக்கொண்டான்பட்டி, சேந்தன்பட்டி, கண்ணனூர், சாவக்காரன்பட்டி, திருநாடன்பட்டி, ஒச்சம்பட்டி உள்பட 70 கிராமங்களில் ஒரே நாளில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக 10 ஆண்டுகால சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள், தேர்தல் வாக்குறுதியிலுள்ள சிறப்பு அம்சங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தார். பிரசாரத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாஜக, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.