26/Mar/2021 11:07:20
ஈரோடு, மார்ச்: திமுக அரசு அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் திமுக வேட்பாளர் முத்துசாமி.
ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி , சித்தோடு, கங்காபுரம் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து வீடுவீடாக சென்று உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்தார்.
வாக்காளர்களிடம், வேட்பாளர் சு.முத்துசாமி பேசியதாவது: திமுகவின் தேர்தல் அறிக்கை பொதுவாகவும், மாவட்ட வாரியாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை முழுமையாக செயல்படுத்தினாலே, மக்களின் குறைகள் முழுமையாக தீர்ந்து விடும். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த தமிழக மக்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ. 4,000 ரூபாய் வழங்கப்படும்.
ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் கொள்முதல் விலையில் உயர்த்தி, விற்பனை விலையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல் விலை, லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு நான்கு ரூபாயும் குறைக்கப்படும். காஸ் சிலிண்டர் மானியமாக, 100 ரூபாய் வழங்கப்படும்.
மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலாகும். இதன் மூலம், மின் கட்டணம் குறையும். ரேஷன் கடைகளில மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு திமுக அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாளில் தீர்வு காணப்படும் .
ஈரோடு மேற்கு தொகுதியில் நிலவும் குடிநீர், சாலை, கழிவு நீர் சாக்கடை பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தீர்வு காண, புகார் மையம் ஏற்படுத்தப்படும் என்றார் முத்துசாமி.