logo
அதிகரித்து வரும் கொரோனா பரவல்: மார்ச்22 முதல் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பு தவிர  பிற வகுப்புகள் காலவரையின்றி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

அதிகரித்து வரும் கொரோனா பரவல்: மார்ச்22 முதல் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பு தவிர பிற வகுப்புகள் காலவரையின்றி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு

21/Mar/2021 12:03:50

சென்னை, மார்ச்: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல்: மார்ச் 22 முதல் பள்ளிகளில் பிளஸ்2 வகுப்பு தவிர  பிற வகுப்புகள் காலவரையின்றி மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இது  குறித்து  தமிழக அரசின் தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  கோவிட் தொற்று பரவும் சூழ்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் சில பள்ளிகளில் ஏற்பட்டுள்ள கோவிட் கூட்டுத் தொற்றால் அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளில் பரவி பன்மடங்கு அந்த மாவட்டத்திலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று பொது சுகாதார வல்லுனர்கள்  தெரிவித்துள்ளனர்.

மேலும் இதனை உடனடியாக தடுக்க, 9-ஆம்  வகுப்பு முதல் 11-ஆம் வகுப்புவரையிலான வகுப்புகளை நடத்த வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்துள்ளார். மேலும், 12-ஆம் வகுப்பு  மாணவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளதாலும், அவர்கள் பொதுத் தேர்வை எழுத வேண்டி உள்ளதாலும், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி  நெறிமுறைகளைப் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் 

12-ஆம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதிக்கலாம் என்றும், இவர்களுக்கான  விடுதிகளையும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரின் பரிந்துரைகளை ஏற்று, மக்கள் நல்வாழ்வு  மற்றும் குடும்ப நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைகளோடு ஆலோசிக்கப்பட்டு கவனமாக பரிசீலனை செய்யப்பட்டது.  கோவிட் தொற்று அதிகரித்து வருவதாலும், கோவிட் தொற்றால் மாணவர்களும் அதனால் பொதுமக்களும் பாதிக்கக்கூடாது என்பதாலும், மாணவர்கள் மற்றும்  பொதுமக்களின் நலன்கருதி வரும் 22.3.2021 தேதி முதல்   மறு உத்தரவு வரும்  வரை அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளை  மூடுவதற்கு உத்தரவிடப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இவர்களுக்கான விடுதிகளும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும்   9, 10 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு இணையவழி / டிஜிட்டல் வகுப்புகள்  தொடர்ந்து நடைபெறும்.  மேலும், தமிழ்நாடு மாநில வாரியம் தவிர மற்ற  வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  அத்தேர்வு வாரியங்களால் அறிவிக்கப்பட்டுள்ளபடி நடைபெறும்.  இப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில்  சிறப்பு வகுப்புகள்  நடத்தவும் அவர்களுக்கான விடுதிகள் இயங்கவும் அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. 

கோவிட் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும் அரசால் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருகிறது.  பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும், சமூக  டைவெளியை கடைபிடிக்கவேண்டும் மற்றும் அடிக்கடி கைகளை சோப்பு  போட்டு கழுவவேண்டும்.

அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் 45 வயது முதல் 59 வயதுக்கு  உட்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், சுகாதாரப் பணியாளர்கள், இதர முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில்  ஈடுபடும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வயது வரம்பின்றியும்  அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அதில் தலைமைச்செயலர் ராஜீவ் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

 


Top