logo
தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி.. வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு மாட்டுச் சந்தையில்   விற்பனை சரிவு

தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி.. வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு மாட்டுச் சந்தையில் விற்பனை சரிவு

18/Mar/2021 10:25:49

ஈரோடு, மார்ச்: தேர்தல் பறக்கும் படை சோதனை எதிரொலி காரணமாக  ஈரோடு மாட்டுச் சந்தைக்கு  வெளிமாநில வியாபாரிகள் வராததால்  விற்பனை சரிந்ததாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஈரோடு கருங்கல்பாளையம் வாரச்சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை கறவை மாட்டுச்சந்தை  நடைபெறுவது வழக்கம்.இதில் கேரளா மகாராஷ்டிரா ஆந்திரா தெலங்கானா கர்நாடகா கோவா போன்ற நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள்  வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். இதைப் போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகளவு வந்து மாடுகளை வாங்கிச் செல்வார்கள். சராசரியாக ஒவ்வொரு வாரமும் ரூ. 3 கோடி முதல் 4  கோடி வரை வர்த்தகம் நடைபெறும்.

தற்போது தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால் ரூ 50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் அந்த  பணங்களை  தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்  பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் பெண்கள் பல மாட்டு சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வர தயங்குகின்றனர். கடந்த சில வாரங்களாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. 

அதேபோல் கேரளா மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது.இதனால் இந்த மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாநில வியாபாரிகள்  இ- பாஸ் பெற்று வரவேண்டும். இந்த ஒரு காரணமாகவும் வியாபாரிகள் வர தயங்குகின்றனர். 

இந்நிலையில் வியாழக்கிழமை  கூடிய மாட்டுச்சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை இல்லாமல் வெறிச்சோடியது. ஒரு சில உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். இன்று கூடிய மாட்டு சந்தையில் வளர்ப்பு  கன்று 100 பசுமாடு 450, எருமை மாடுகளை 200 என மொத்தம் 750 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் வளர்ப்பு கன்றுகளை 10 முதல் 15 ஆயிரம் வரையும், பசுமாடு ரூ 30 முதல் 70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ 30 முதல் 55 ஆயிரம் வரையும் விற்பனையானது.

Top