12/Mar/2021 10:03:32
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுடன் செலவின பார்வையாளர் அரூப் சட்டர்ஜி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சுமூகமாக நடைபெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து வசதிகளையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் செலவின பார்வையாளர்களாக ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு அரூப் சட்டர்ஜி, மொடக்குறிச்சி, பெருந்துறை தொகுதிகளுக்கு சஞ்சீவ் குமார் தேவ், அந்தியூர், கோபி தொகுதிகளுக்கு அர்ஜூன் லால் ஜட் மற்றும் பவானி, பவானி சாகர் தொகுதிகளுக்கு பவானி சங்கர் மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வெள்ளிக்கிழமை ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதி செலவின பார்வையாளர் அரூப் சட்டர்ஜி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்யும் பணியை பார்வையிட்டார்.
வேட்புமனு தாக்கலின் போது செய்யப்பட்டுள்ள வசதிகள் கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார். ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மா. இளங்கோவன் வேட்பு தாக்கலின்போது செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அரூப் சட்டர்ஜியிடம் விவரிவாக எடுத்துக் கூறினார்.