04/Mar/2021 01:11:53
திமுக - காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும், ஏனென்றால் பந்து அவர்கள் கையில் தான் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், கடலூரில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் பந்து அவர்கள் கையில்தான் உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பலம் இருக்கிறது. அதன் பலம் என்ன என்பது ராகுல் தமிழகம் வரும் போது தெரிகிறது.
ஏன் என்றால் பத்து பைசா கூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது என்றால் அது ராகுல் பிரசாரத்தின் போதுதான். ஏனென்றால், செலவு செய்து கூட்டத்தைக் கூட்டுவதற்கு எங்களிடம் பணமில்லை. ஏனென்றால் காங்கிரஸ் கட்சியால் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்று மக்கள் கருதுகிறார்கள் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.