logo
ஈரோட்டில் முதல் நாளில் 223 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத் துறையினர் தகவல்

ஈரோட்டில் முதல் நாளில் 223 முதியோர்களுக்கு கொரோனா தடுப்பூசி:சுகாதாரத் துறையினர் தகவல்

02/Mar/2021 07:19:43

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில்  60 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

உலகம் முழுவதும் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

முதற்கட்டமாக அரசு ,தனியார் மருத்துவமனையில்  பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு போடப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலும் ஐந்து அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இரண்டு தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி முதற்கட்டமாக   போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை  முதல் 60 வயது மேல் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி தொடங்கியது. இதேபோல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உள்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்   கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளிலும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை உள்ள இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதல் நாளில் மட்டும் மாவட்டம் முழுவதும் 223 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிதனர். 

Top