logo
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னிமலை அருகே  விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னிமலை அருகே விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

28/Feb/2021 05:41:33

ஈரோடு, பிப்: கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னிமலை அருகே  விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வியாழக்கிழமை பிரதமர் மோடி கோவை வந்த போது இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னிமலையில் கடந்த 12-ஆம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி பிப்.(26- இல் சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலின் ஏரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி தலைவர் மு.ரவி தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களை கையில் ஏந்தி, கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து சனிக்கிழமை சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும்,  ஞாயிற்றுக்கிழமை, திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும், மார்ச். 1-ஆம் தேதி (திங்கட்கிழமை) திட்டம்பாளையத்திலும், 2-ஆம்  தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் உள்ள வாய்க்கால் பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடர் போராட்டங்களை விவசாயிகள் நடத்தவுள்ளனர்.

Top