17/Feb/2021 08:22:58
ஈரோடு பிப்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புஞ்சைபுளியம்பட்டி, கோட்டப்பாளையம் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைந்த இந்த பகுதியில், புதன்கிழமை மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்தது. தீ மளமளவென எரிந்து அருகில் உள்ள மற்றொரு வீட்டுக்கும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. அந்த பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று விட்டதால், அங்கிருந்த சிலர் தாமாக முன்வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் மற்றும் நம்பியூரில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைத்ததால், தீ மேலும் மற்ற வீடுகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது.
எனினும் கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் சின்ன பழனி மற்றும் ராமாள் ஆகியோருக்கு சொந்தமான இரு வீடுகளும் முழுவதும் தீக்கிரையாகியதோடு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பலாகின. இது குறித்து காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் விசாரிக்கின்றனர்