15/Feb/2021 10:57:10
சென்னை, பிப்: நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 4-ஆம் தேதி 25 ரூபாய் சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 50 ரூபாய்உயர்ந்துள்ளது.
சென்னையில் தற்போது ஒரு சிலிண்டர் ரூ.785 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரே மாதத்தில் சிலிண்டரின் விலை 75 ரூபாய் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி 16-ஆம் தேதி என இருமுறை மாற்றியமைக்கப் படுகிறது.
அதேநேரம் பெட்ரோல் டீசல் விலை தினமும் மாற்றியமைக்கப் படுவதால் அதன் விலை தினசரி அதிகரிப்பதாகவே உள்ளது. இதேபோல் 15 நாட்களுக்கு ஒரு முறை சமையல் எரிவாயு சிலிணடர் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை உயர்வை சந்திக்கிறது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாத தொடக்கத்தில் ரூ.25 உயர்த்தப்பட்டது.அதன்படி சென்னையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.735 ஆக இந்த மாத தொடக்கத்தில் உயர்ந்தது. இன்று மீண்டும் 50 ரூபாய் உயர்ந்து ஒரு சிலிண்டர் 785 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
டிசம்பர் 1ம் தேதி 610 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்னையில் தற்போது ரூ.785 ஆக உள்ளது.
தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இம்மாத தொடக்கத்தில் ரூ.56.50 உயர்ந்து ரூ.1,410.10- க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிஅதன் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் திருத்தி அமைத்து வருகின்றன..