15/Feb/2021 10:42:44
ஈரோடு, பிப்:ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இணைந்து ரூ. 45 லட்சத்து 95 ஆயிரத்தை கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் நிதியாக பொதுச்செயலர் வைகோவிடம் கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது என்பது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதே முடிவெடுக்கப்பட்டது. திராவிட இயக்கத்தை சிதைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் முயற்சிப்பதை தடுக்க வேண்டும். சுயமரியாதை கொள்கையை நிலைநாட்டுவதற்காகவும் தான் திமுக கூட்டணி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சூழலை பாதுகாக்க மதிமுக போராடியது , நியூட்ரினோவுக்கு எதிராக போராடியது , 7 பேர் விடுதலைக்காக போராடியது மதிமுக. தமிழ்நாட்டு நலனுக்காகவும் , தமிழர்களின் வாழ்வு வளம் பெறுவதற்காகவும் , திராவிட இயக்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கவே மதிமுக பாடுபடுகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்றார் வைகோ. இதில், ஈரோடு, நாமக்கல் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.