29/Jan/2021 11:07:48
ஈரோடு, ஜன: வன்னியர்களுக்கு 20 சதவீத உள் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கத்தினர் ஒன்றிணைந்து கிராம நிர்வாக அலுவலகங்களில் மனு, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மனு என 5 கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி. கே. மணி ஆகியோர் ஆலோசனைப்படி என்று 6-ஆவது கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
இதற்காக ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பா.ம.க.வினர் குவிய தொடங்கினர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் த.ப. பரமேஸ்வரன் தலைமை வகித்தார். புறநகர் மாவட்ட மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். ஆர். போபால் வரவேற்றார். மாநில துணை தலைவர்கள் எஸ்.எல். பரமசிவம் ,எம்.பி. வெங்கடாசலம், மாவட்ட செயலாளர்கள் பிரபு, எஸ்.ஆர்.ராசு, மனோகர், பி.டி .ராசு, சசிமோகன், மாநில துணைத்தலைவர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பசுமை தாயக மாநில துணைப் பொதுச் செயலாளர் சத்ரிய சேகர் கலந்து கொண்டு பேசினார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பொ.வை.ஆறுமுகம், அருள்மொழி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்டலாளர் செல்வராஜ், திருமுருகன், மற்றும் பா.ம.க நிர்வாகிகள், வன்னியர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநகர் மாவட்ட மாநில துணை பொது செயலாளர் பரமேஸ்வரன் தலைமையில் பா.ம.க.வினர் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் இருந்து பெருந்துறை சாலை வழியாக ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.