29/Jan/2021 10:34:12
ஈரோடு, ஜன: ஈரோட்டில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனைகளில் செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.
கோரிக்கைகள்: மத்திய அரசு செலிலியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய நர்சுகளுக்கு அரசு அறிவித்த ஒரு மாத ஊக்கத் தொகையும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் களுக்கு நிவாரணம், கொரோனாவால் உயிரிழந்த செவிலியர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கிட வேண்டும்.
6 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொகுப்பூதிய முறையை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு செலிவியர்களை போல 5 கட்ட காலமுறை பதவி உயர்வு மற்றும் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட பதவி பெயர் மாற்ற அரசு ஆணை வழங்கவேண்டும்.
புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி-29 முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 1500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சகிலா கூறியதாவது: செவிலியர்களின்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமையிலிருந்து செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி புரிவார்கள். நோயாளிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பணிபுரிவார்கள். ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் மொத்தம் 200 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதைப்போல் கோபி, சத்தியமங்கலம் ,பவானி, பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி உள்பட மாவட்டம் முழுவதும் 1,500 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இதைப்போல் எம். ஆர். பி .யில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவதாகவும் கூறினார்.