21/Dec/2020 08:59:50
புதுக்கோட்டை, டிச: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஆட்சேபங்கள் இருப்பின் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 16.11.2020 அன்று வெளியிடப்பட்டது. 16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. 21.11.2020, 22.11.2020, 12.12.2020 மற்றும் 13.12.2020 ஆகிய நாள்களில் விண்ணப்பங்கள் பெற சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
16.11.2020 முதல் 15.12.2020 முடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்கம் செய்ய மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள பெறப்பட்ட விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்து அதன் சுருக்க விபரம் உரிய படிவத்தில் புதுக்கோட்டை மாவட்ட இணையதளத்தில் (https://pudukkottai.nic.in/election) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் அறிவிப்புப் பலகையில் விண்ணப்பங்கள் குறித்த சுருக்க விபரம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஆட்சேபணை இருக்கும் பட்சத்தில் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம் பின்வரும் குறிப்பிட்ட அலுவலகங்களில் தனது ஆட்சேபணைகளை எழுத்து மூலமாக 14.1.2021- க்குள் தெரிவிக்கலாம்.
178 கந்தர்வக்கோட்டை, 180 புதுக்கோட்டை, 181 திருமயம், 182 ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், புதுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலகத்திலும், 179 விராலிமலை சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர், இலுப்பூர் வருவாய் கோட்ட அலுவலகத்திலும், 183 அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சார் ஆட்சியர், அறந்தாங்கி அலுவலகத்திலும் தெரிவிக்கலாம்.