07/Dec/2020 03:38:06
புதுக்கோட்டை : முன்னாள் படைவீரர்களின் நலனுக்கான கொடிநாள் நிதியாக ரூ. 1 கோடியே 8 லட்சத்தி 15 ஆயிரம் தொகை வசூலிக்க புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் இன்று (7.12.2020) நடைபெற்ற நிகழ்வில் கொடி நாள் வசூலை தொடக்கி வைத்தபின்ஆட்சியர் மேலும் கூறியதாவது: இந்திய திருநாட்டை பாதுகாத்து வரும் முப்படை வீரர்களின் தியாக உணர்வைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடி நாள் வசூலினை உண்டியலில் பணம் செலுத்தி தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிநாள் நிதிவசூல் மூலம் கிடைக்கும் நிதியானது முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2019 -ஆம் ஆண்டில் ரூ.98.82 லட்சம் கொடிநாள் நிதிவசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று நடப்பு (2020) ஆண்டிற்கு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ரூ. 1,08,15,000 தொகை கொடிநாள் நிதிவசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிகமாக நிதி வழங்கி முன்னாள் படைவீரர்கள் நலனுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும் என்றார். நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலர் செண்பகவள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.