03/Dec/2020 01:29:42
புதுக்கோட்டை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவெடுத்துள்ளது. புரெவி புயலானது கன்னியாகுமரி- பாம்பன் இடையே இன்று இரவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை முதலே சூரியன் முகமே தெரியாத வகையில் வானத்தில் கருமேகக் கூட்டங்கள் காணப்பட்டன. இதனால், குளிர்ந்த நிலையே நீடித்தது. மேலும் அவ்வப்போது சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது.
புதுக்கோட்டைநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் சாரல் மழையின் காரணமாக . நகர் முழுவதும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடை மற்றும் மழை கோட் அணிந்தும் சென்றதை அதிக அளவில் காணமுடிந்தது.
சாரல் மழை: நள்ளிரவு தொடங்கி இன்று பகல் 1.30 மணி வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. புதுக்கோட்டை பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள் பயணிகள் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது.
நகரில் பெய்து வரும் சாரல் மழையால் லாரிகளில் இருந்து காய்கறிகளை மூட்டைகளை இறக்குவதில் தொழிலாளர்கள் பெரும் சிரமப்பட்டனர். மேலும் வியாபாரமும் பாதிக்கப்பட்டது. உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், கடைவீதியில் பொது மக்கள் நடமாற்றமின்றி வெறிச் சோடி காணப்பட்டது. அன்றாடம் அதிகாலையிலிருந்து தினசரி செய்தித்தாள்களைவீடுகளுக்கும்.நிறுவனகளுக்கும் கடைகளுக்கும் கொண்டு செல்லும் முகவர்கள் தொடர் மழையின் காரணமாக மிகவும் சிரமப்பட்டனர்.
இதுபற்றி பேப்பர் முகவர் செல்வம் கூறியதாவது: மழைத தொடர்ந்து பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளுக்கு பேப்பர் கொண்டு செல்லமுடியவில்லை ஆங்காங்கே பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது. மேலும், புதைசாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் நிரம்பியிருப்பது தெரியவில்லை. மழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகளிலும் தண்ணீர் ஒடி கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வாசகர்களுக்கு தினசரி செய்தித்தாள்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமையிலிருந்து தவற முடியாது என்றார் .