01/Dec/2020 11:18:58
ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆறு ,வைரம்பாளையம் காவேரி ஆறு பகுதிகளில் ஏராளமானவர்கள் மீனவர்கள் தோனியில் சென்று மீன் பிடிப்பது வழக்கம். இதில் சில மீனவர்கள் தோட்டா (டெட்டனேட்டர்) வீசி மீன் பிடித்தனர். இதனால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு மீனவர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீனவர்கள் தோட்டா வீசி மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஈரோடு வைராபாளையம், செங்கோட்டையன் நகர், செங்கல் சூளை அருகே வசிக்கும் வசந்தகுமார் ( 32). மீனவரான இவர் நேற்று மாலை வைராப்பாளையம் காவிரி ஆற்றில் மீன்பிடிக்க தோனியில் சென்றார். அங்கு தோட்டா வீசி மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு தோட்டாவை தீயில் வைத்து வீசும் போது அது எதிர்பாராத விதமாக கையிலேயே வெடித்தது.
இதில் வசந்தகுமார் இரு கைகளில் உள்ள பத்து விரல்களும் துண்டானதுடன் நெஞ்சு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்த மீனவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தடை செய்யப்பட்ட தோட்டா வசந்த குமாரிடம் எப்படி வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் குணமானதும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்