29/Nov/2020 05:18:52
ஈரோடு : பாடத்திட்டம் குறைப்பது குறித்து அறிக்கை முதல்வரிடம் நவ.30( திங்கள்கிழமை) வழங்கப்படும் என அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையம், குருமந்தூா், கோசணம், அஞ்சானூா், ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தனிநபா் குடிநீா் திட்டப்பணி, கன்று வளா்ப்பு கடனுதவி, மகளிா் சுய உதவிக்குழுகள் கடனுதவி என ரூ.6.19 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தாார்
இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பாடத்திட்டம் குறைப்பது குறித்து அரசு ஏற்கனவே நிபுணர் குழு அமைத்துள்ளது. அக்குழுவின் அறிக்கை முதல்வரிடம் வழங்கப்பட்ட பிறகு அடுத்த சில தினங்களில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் அதற்கு ஏற்ப கல்வி தொலைக்காட்சியிலும் ஆன்லைன் மூலமும் பாடங்கள் மாணவ மாணவிகளுக்கு நடத்தப்படும்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில் அரையாண்டு தேர்வு நடைபெறாது .கடந்த காலத்தில் ஜேக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்து இப்போது கருத்து கூற இயலாது. புதிய கல்வி கொள்கை குறித்து நிபுணர் குழு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர் இடமிருந்து கருத்துக்களை திரட்டி வருகிறது. மத்திய அரசு 2023 முதல் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்கனவே அரசு ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அக்குழு அனைத்து தரப்பு விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். அக்குழுவின் அறிக்கை விரைவில் வேளாண் துறை அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்படும்.
புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு சிறப்பாக செய்துள்ளது என்று அனைத்து தரப்பு மக்களும் பாராட்டியுள்ளனர். ஆனால் எதிர்கட்சி தலைவர் ஏற்கெனவே சென்னை மாநகராட்சி மேயராக இருந்துள்ளார். அவரது தந்தை முதல்வராக இருந்துள்ளார். அப்போதெல்லாம் என்ன நடந்தது என்பது அவருக்கே தெரியும். எனவே அவரது குற்றச்சாட்டில் நியாயம் இல்லை.
அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன இடம் பெறும் என்று கூற இயலாது. அதிமுக- பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால், அதனுடைய வாக்கு வங்கிஎவ்வளவு உயரம் என்பது தேர்தல் சமயத்தில் தான் தெரியும் அது மக்களின் கையில் உள்ளது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.
இதில், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பி என்கிற சுப்பிரமணி, நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, எலத்தூர் பேரூர் கழக செயலாளர் பேரன் சரவணன், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.