30/Oct/2020 09:43:50
புதுக்கோட்டை: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கோவிட் நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றினை பரவாமல் கட்டுப்படுத்திடவும் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தீபாவளி பண்டிகை விழா காலம் தொடங்குவதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்திட பொது மக்கள்; முககவசம் அணியவும், அதிகமாக மக்கள் கூடுமிடங்களில் சமூக இடைவெளியினை முறையாகக் கடைபிடிக்கவும், கைகளை அடிக்கடி கழுவிடவும் அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து கடைகளிலும், கடை உரிமையாளர்கள் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடனும், சமூக இடைவெளிக்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடைபிடிப்பதுடன், வளாகத்தில் கிருமி நாசினி தெளித்தும், வருகை தரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துகொண்டு வரவும் அறிவுறுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இவ்வுத்தரவினை கடைப்பிடிக்காத மற்றும் மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.