logo
அரசு மருத்துவக் கல்லூரி  மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

அரசு மருத்துவக் கல்லூரி மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

26/Oct/2020 08:23:15

புதுக்கோட்டை:  அரசு மருத்துவக்கல்லூரியில் இன்று(அக்.26) நடைபெற்ற முகாமை மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி தொடங்கி வைத்தார்..


 அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலக சுகாதார அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு பிங் அக்டோபர் என்ற பெயரில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொது அறுவை சிகிச்சை துறையின் சார்பில் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் பெண்கள் அதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் 5 நாட்களுக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. 

இந்த முகாமினை, மருத்துவக் கல்லூரி முதல்வர் பூவதி இன்று தொடங்கி வைத்து பேசுகையில், உலகம் முழுவதிலும் உள்ள பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 10.5 சதவீதம் மார்பக புற்று நோயாக உள்ளது என்றும், 1.4 சதவீதம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும்,நகர்ப்புறங்களில் பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இருந்தாலும் கிராமப்புறங்களில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருமே வருடத்திற்கு ஒருமுறை தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும், ஆரம்ப காலகட்டத்திலேயே இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது எளிது என்றும், கிராமப்புற பெண்களும் எந்தவித தயக்கமுமின்றி அரசு மருத்துவ மனைக்கு வந்து தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டால் அவர்களுக்கு தேவையின் அடிப்படையில் மேமோகிராம், ஸ்கேன், சிசு புளித்த பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் இதனை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மேலும்,  மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கினார். பெண்களுக்கு மார்பக புற்றுநோயின் பாதிப்பு குறித்தும் அதிலிருந்து அவர்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகள் குறித்து மருத்துவக்குழுவினர்  எடுத்துரைத்தனர்.

Top