logo
இன்றைய சிந்தனை (23.10.2020) வாழ்க்கையின் வெற்றி எதில் இருக்கிறது..

இன்றைய சிந்தனை (23.10.2020) வாழ்க்கையின் வெற்றி எதில் இருக்கிறது..

23/Oct/2020 09:17:08

வாழ்க்கையின் வெற்றி எதில் இருக்கிறது, செல்வத்திலா செல்வாக்கிலா படிப்பிலா  உயர் பதவியிலா இதில் எதிலும் அது இல்லை.அவைகள் உங்களுக்கு வசதிகளையும், நல்வாய்ப்புகளையும் தேடித் தர பயன்படலாம். அதனால் மட்டும் உங்கள் வாழ்க்கை நிறைவடைந்து வெற்றி அடைந்து விடாது. 

அவைகள் எல்லாம் கிடைத்த பிறகும் உங்கள் மனசு மீண்டும் தேடி அலைந்து கொண்டே தான் இருக்கும். எதை,  மன அமைதியை அதாவது நிம்மதியை. நிம்மதி தான் மனித வாழ்க்கைக்கு நிறைவு தரக்கூடியது. வாழ்க்கையில் நிம்மதியை மொத்தமாக எதைக் கொடுத்தும் வாங்கிக் கொள்ள முடியாது. அது சிறு சேமிப்பு போன்ற ஒரு விஷயம். கொஞ்சம் கொஞ்சமாகத் தான் அதைத் தேடி சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.


பல சான்றோர்கள் கடவுள் நமக்குள்ளே தான் இருக்கிறான் என்று சொல்வார்கள்.ஆம், கடவுள் நமக்குள் தன் பிரதிநிதியை வைத்துத் தான் ஒவ்வொரு மனிதனையும் படைக்கிறான்.அந்தப் பிரதிநிதி நம் உயிர் பிரியும் வரை, ஒரு வினாடி கூடத் தூங்காமல் விழித்துக் கொண்டு, எது தர்மம், எது நியாயம் என்று நமக்கு வழி காட்டிக் கொண்டு தான் இருக்கிறான். அதற்குப் பெயர் தான் மனச்சாட்சி. 

எப்பொழுது நாம் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுகிறோமோ அப்பொழுதே நம் மனசில் ஒரு சுமை ஒரு பாரம் ஏற்றப்படுகிறது. நாம் வாழ்நாள் முழுவதும் பல சுமைகளை பாரங்களை ஏற்றிக் கொண்டே போகிறோம்.

நம் மனசில் சுமைகளை ஏற்றிக் கொண்டே போகப்போக நம் மனசு சுமை தாங்காமல் மன அழுத்தம் அதிகமாகிக் கொண்டே போகும் மன அழுத்தம் ஒரு கொடிய நோய். அதற்கு சரியான மருந்து கிடையாது. 

அந்த அழுத்தம் ஒரு பாதுகாப்பற்ற மனோநிலையை உங்களுக்குள் உருவாக்கி, நம் மன நிம்மதியைப் போக்கி, நம் வாழ்க்கையில் நாம் எதை தேடிக் கொண்டாலும் நிம்மதியில்லாமல் நம்மை வேதனையில் தள்ளி விடுகிறது.யாரும் கண்டு பிடிக்க முடியாது என்று தெரிந்தே நாம் மனச்சாட்சிக்கு விரோதமாக செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு சுமை தான்.

வாழ்நாள் முழுவதும் இப்படி நிறைய சுமைகளை நாம் ஏற்றிக் கொண்டே போகிறோம். எப்படி சிறு சேமிப்பு என்று கொஞ்சம் கொஞ்சமாக நாம் பணத்தை சேமித்துக் கொண்டே போகிறோமோ, அதே போல் நம் வாழ்க்கையில் மனசாட்சி தவறு என்று சுட்டிக் காட்டும் தவறுகளை எல்லாம் அதாவது அந்தப் பாவ சுமைகளை  எல்லாம் அவ்வப்பொழுது வாழ்க்கையில் இறக்கி வைத்துக் கொண்டே போக வேண்டும்.  ஆம் நண்பர்களே, மனசில் சுமை இல்லாவிட்டால், மன அழுத்தம் இருக்காது. அதன் சுகமே தனி. அனுபவித்துப் பாருங்கள் சொர்க்கம் உங்கள் கைகளில் 

Top