17/Oct/2020 12:41:37
சென்னை: திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திமுகவின் கடும் எதிர்ப்பு, திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியின் சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சிமிகு போராட்டம் ஆகியவற்றிற்கு பிறகு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனத் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என்று அறிவித்துள்ளது காலதாமதமானது என்றாலும்; வரவேற்கத்தக்கது.
அமைச்சர் இப்படி பேட்டி கொடுப்பதைவிட தமிழக அரசின் இந்த முடிவை உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக, வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அரசின் கொள்கை முடிவில் தலையிட்டு-தன்னிச்சையாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கிய, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்வதற்கு, பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் தமிழக ஆளுநருக்கு முதல்வர் பழனிசாமி உடனடியாகப் பரிந்துரை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.