logo
வலைதளத்தில் அவதூறான பதிவை நீக்க  எழுத்தாளர் ஜெயமோகனுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தல்

வலைதளத்தில் அவதூறான பதிவை நீக்க எழுத்தாளர் ஜெயமோகனுக்கு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வலியுறுத்தல்

17/Oct/2020 10:39:43

இது குறித்து,  தமுஎகச தலைவர் ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய மடல்:

தங்கள் வலைத்தளத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்கள்மீதான் வழக்கின் தீர்ப்பு பற்றி எழுதியிருக்கிறீர்கள். அதில் நான் பொறுப்பு வகிக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம்  பற்றியும் எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா மீது கொலைப்பழி சுமத்தும் விதமாகவும் எழுதியிருக்கிறீர்கள். ஆழ்ந்த வருத்தத்துக்கும் கண்டனத்துக்கும் உரிய பதிவுகள் இவை.

வசுமித்ர என்பவர் மீது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வன்கொடுமை வழக்குத் தொடர்ந்ததாக எழுதியிருக்கிறீர்கள். இது முற்றிலும் பொய்யான தகவல். 25 ஆண்டுகளுக்கு மேலாக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொறுப்பாளனாக இயங்கிவருபவன் என்கிற முறையில் நான் கூற விரும்புகிறேன்.

 சங்கம் துவக்கிய நாள் முதல் இன்றுவரை  யார்மீதும் எங்கள் சங்கம் அப்படி வழக்குத் தொடுத்ததே இல்லை. ஆகவே உங்கள் பதிவில் உள்ள எங்கள் சங்கம் பற்றிய தவறான பதிவை உடனடியாக நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் அமைப்பின் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா  பிள்ளைகெடுத்தாள் விளை என்கிற சுந்தரராமசாமி அவர்களின் கதை பற்றி குமுதத்தில் சொன்ன ஒரு கருத்துதான் அது. அதற்குப்பிறகு அவரும் அதுபற்றி வேறு எங்கும் பேசியதுமில்லை எழுதியதுமில்லை.

ஆதவன் தீட்சண்யா வகையறாக்களால் வேட்டையாடப்பட்ட போது” என்கிற  கடுமையான கண்டனத்துக்குரிய வார்த்தைகளில் அதை வளர்த்தெடுக்கிறீர்கள்.இந்தப்பதிவையும் நீக்க வேண்டும் என வேண்டுகிறேன். சுந்தரராமசாமி அவர்கள் மீது பெரும் மதிப்புக்கொண்ட நானும் அவரோடும் கண்ணனோடும் தொடர்பில் இருப்பவன் தான். ஆதவன் தீட்சண்யாவின் கருத்துக்காகத்தான் பயந்து போய்  அவர் அமெரிக்காவில்  தங்கியிருந்தார். அவர் சாவுக்கே இவர் கருத்துத்தான் காரணம் என்று கொலைப்பழி சுமத்தும் அளவுக்கு எழுதியிருப்பது மிக மிகக் கடுமையான வார்த்தைகள்.

பொதுவெளியில்  இப்படி எங்கள் அமைப்பையும் அதன் பொறுப்பாளரையும் அவதூறு செய்வதை ஏற்க முடியாது. ஆகவே உடனடியாக இந்தப் பதிவுகளையெல்லாம் நீக்கவேண்டும். அதுதான் அறம்  என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.


Top