logo
வரும் சட்டப்பேரவைத்தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கை ஜீரோதான்: பாஜக தலைவர் முருகன்

வரும் சட்டப்பேரவைத்தேர்தலிலும் திமுக தேர்தல் அறிக்கை ஜீரோதான்: பாஜக தலைவர் முருகன்

14/Oct/2020 01:17:28

சென்னை: திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப்பேரவை தேர்தலை போன்று வரும் தேர்தலிலும் ஜீரோவாகத்தான் இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் எல். முருகன். தெரிவித்துள்ளார்.


2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில், திமுக அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா  அறிவாலயத்தில் கட்சியின் பொருளாளர் டி ஆர்.பாலு தலைமையில் இன்று(புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், திமுக பொருளாளர் டி.ஆர் பாலு, நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் ஆ ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர் ராமசாமி உள்ளிட்ட 8 பேரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வரும் ஜனவரி மாதம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு பிப்ரவரி முதல் வார இறுதி தேர்தல் அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிகிறது.

இந்நிலையில், சென்னை அடையாறில் செய்தியாளர்களுக்கு பாஜக தலைவர் எல். முருகன் அளித்த பேட்டியில்,திமுக தேர்தல் அறிக்கை கடந்த சட்டப்பேரவை தேர்தலைப் போன்று வரும் தேர்தலில் ஜீரோவாகத்தான் இருக்கும். வேளாண் சட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர். சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். திமுக தலைவர், அக்கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அறிக்கை  மட்டுமே விடுகின்றனர். ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் விவகாரத்தில் திமுக தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 


Top