19/Mar/2020 03:57:31
தமிழகத்தில் மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவர்களுக்கு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் சான்றிதழ் வழங்கினார்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), முத்துக்கருப்பன் (அ.தி.மு.க.) ஆகிய 6 பேரின் பதவிக்காலமும் நிறைவடைகிறது. இந்நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்காக தமிழகத்தில் போட்டியிட்ட 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக, சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, ஜி.கே.வாசன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ மற்றும் அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்துள்ளார்.