logo
100 நாள் வேலைத் திட்டத்தினை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தினை பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

07/Oct/2020 10:01:20

ஈரோடு: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலைத் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்:  கடந்த 40 ஆண்டு காலமாக கிராமப்புற மக்களின் நலன் கருதி இடதுசாரி கட்சிகளால் போராடி பெற்ற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் கடந்த 2006 -ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுவருகிறது. இத்திட்டம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் போராடி வருகிறது.  

இந்நிலையில், மத்திய அரசு பேரூராட்சி மற்றும் நகரங்களில் நகர்ப்புற வேலைத்திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 526 பேரூராட்சிகளில் சுமார் 25 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் வறுமையில் வாழ்ந்து வரும் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மற்றும்  மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது பேரூராட்சி பகுதியில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும்  வகையில் 100 நாள் வேலை உறுதித்திட்டத்தை பேரூராட்சிகளில் வழங்க வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஸ்குமாரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வி.ஆர்.மாணிக்கம் தலைமை  வகித்தார்.. மாவட்டக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, கோபி தாலுகா செயலாளர் கெம்புராஜ், விவசாய சங்க தாலுகா செயலாளர் வெங்கிடுசாமி உள்பட  200க்கும் மேற்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.                                                                               


Top