logo
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

04/Sep/2021 09:56:44

ஈரோடு, செப்: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரத்தில் அமைந்துள்ளது தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை  இங்குள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை  வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது. கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறை பல்வேறு இடங்களில் கூண்டு வைத்தனர். 

ஆனால் சிறுத்தை  கூண்டில் சிக்காமல்  அருகில் இருந்த கல்குவாரியில் சென்று பதுங்கி கொள்வதும் வாடிக்கையாகி விட்டது.  இந்நிலையில் தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்தவர் மானாவாரி விவசாயி ரங்கசாமி (45) ஏழு மாடுகள் வளர்த்து வருகிறார். இவரது வீடு மற்றும் மாட்டு கொட்டகை ஊரை ஓட்டி உள்ளது. வழக்கம் போல் மாடுகளை மாட்டு கொட்டகையில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது தனது  கன்றுக்குட்டி உடல் முழுதும் காயங்களுடன்  இறந்து கிடந்தது.

  இதுபற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தாளவாடி வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் சிறுத்தை தாக்கியதால் கன்றுக்குட்டி  உயிரிழந்ததை  உறுதி செய்தனர்.  தொடர்ந்து  கால்நடைகளை வேட்டையாடிவரும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில்  கல்குவாரி அருகே கூண்டு வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் கூண்டில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.

Top