05/Oct/2020 04:03:10
புதுக்கோட்டை: உலக சாதனைக்காக 2 கிலோ 851 கிராம் 260 மில்லிகிராம் எடையுள்ள தங்க ஒட்டியாணத்தை புதுக்கோட்டை புவனேஸ்வரி தங்கமாளிகை நிறுவனம் தயாரித்துள்ளது.
இது குறித்து, புதுக்கோட்டை புவனேஸ்வரி தங்கமாளிகை நிர்வாகி எஸ். நடராஜன் செய்தியாளர்களுக்கு (அக்.5) இன்று அளித்த பேட்டி:
கடந்த 1981 -ஆம் ஆண்டில் எனது தந்தை என். சோமசுந்தரம் ஆச்சாரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, இன்று 40 -ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் ஸ்ரீபுவனேஸ்வரி தங்கமாளிகை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட மக்களின் நன்மதிப்பைப் பெற்று வணிகத்திலும் வெற்றிபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாநகரில் முதன்முதலாக தரமிக்க புதிய வகை தங்க நகை ஆபரணங்களை அறிமுகம் செய்யும் விதமாக 1970- ஆம் வருடத்திலேயே பெரும் முயற்சியை மேற்கொண்டு வணிகத்தை எனது தந்தை என். சோமசுந்தரம் ஆச்சாரியார் தொடங்கினார்.
எங்களுடைய வணிகமானது தமிழகம், இந்தியா மட்டுமல்லாது கடல் கடந்தும் பல்வேறு நாடுகளின் வாடிக்கையாளர்களையும் கொண்டிருக்கிறது என்றால் தரமும் எங்கள் வணிக நடைமுறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அனைத்து தங்க ஆபரணங்களையும் BIS ஹால்மார்க் தரத்துடன் மட்டுமே செய்து கொடுத்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் நாங்கள் பெற்றுள்ளோம். எங்களது வணிகத்தின் அடையாளமாகவும் ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகை நிறுவனத்தின் 40-ஆவது ஆண்டினைக் கொண்டாடும் வகையில் எங்கள் நகை வணிகத்தில் ஒரு உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
மிகப்பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஒட்டியாணத்தினை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ஸ்(United States LLC) உலக சாதனை நிறுவனம் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாதெமி உலக சாதனை நிறுவனம் மற்றும் தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக நிறுவனம் என 3 உலக சாதனை நிறுவனங்களும் நேரில் ஆய்வு செய்து பரிந்துரை செய்திட அழைப்பு விடுத்துள்ளோம்.
உலக சாதனை விதிமுறைகளின்படி நாங்கள் வடிவமைத்துள்ள ஒட்டியாணம் அமைந்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய தங்க ஒட்டியாணம் எனும் உலக சாதனையைப் படைக்கும். மிகவும் பெரிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தங்க ஒட்டியாணம் உலக சாதனையை ஏற்படுத்தினால் அது நமது நாட்டுக்கும் பண்பாட்டிக்கும் கிடைக்கவிருக்கும் மிகப் பெரிய கௌரவமாகும் என்றார் புவனேஸ்வரி எஸ். நடராஜன்.
நாளை நடைபெறும் உலக சாதனை சான்றளிக்கும் புவனேஸ்வரி எஸ். நடராஜன் மேலும் கூறியது: அக்.6- செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் எங்களுடைய ஸ்ரீ புவனேஸ்வரி தங்கமாளிகையில், திருச்சி மாநகர காவல் ஆணையாளர் ஜெ. லோகநாதன் தலைமையில் விழா நடைபெறுகிறது. விழாவுக்கு, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜிசரவணன் முன்னிலை வகிக்கிறார். சிறப்பு விருந்தினர்களாக எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் ஏசியா பசிபிக் அம்பாஸிடர் ஜவஹர்கார்த்திகேயன், இந்தியா ரெக்கார்ட் அகாதெமி அசியோசியேட் எடிட்டர் பி.ஜெகன்நாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தென்னிந்திய ஆய்வாளர் எல். ராஜ்கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.