10/Aug/2021 10:55:42
புதுக்கோட்டை, ஆக: ரோட்டரி மாவட்டம்-3000 சார்பில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கீரனூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிசன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வெளிநாடு வாழ் இந்தியர்களால் தொடங்கப்பட்டுள்ள ஆக்ட் கிராண்ட்ஸ் என்ற அமைப்பு ரோட்டரி சங்கங்கள் மூலம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.300 கோடி மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க முன்வந்துள்ளார்கள். ஆக்ட் கிரான்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்புகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது.
அத்திட்டத்தின் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் கீரனூர் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் மருத்துவர் கு.மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதாராமு, முன்னாள் அரசு வழக்கறிஞர்கே.கே.செல்லபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஆக்சிசன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பி.எஸ்.தீர்த்தலிங்கத்திடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
மேலும், கொரோனா மூன்றாம் அலை குறித்த விழிப்புணர்வு கையட்டினை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார். அதை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் பட்டயத் தலைவர் க.நைனாமுகம்மது, மேனாள் துணை ஆளுனர் சோம.பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் கான் அப்துல் கபார்கான், ரோட்டரி மாவட்டம் 3000 புதிய சங்கங்கள் விரிவாக்க இயக்குனர் மாருதி கண.மோகன்ராஜா, செயலாளர் தங்கராஜா, பொருளாளர் எஸ்.செந்தில்வேல், கே.கதிரவன், வழக்குரைஞர் செந்தில், எம்.எம்,பாலு, த. சந்திரசேகரன் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.