logo
 சூரிய ஒளி சக்தி மின் மோட்டார்கள் பயன்பாடு தொடர்பாக :விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: ஆட்சியர் தகவல்

சூரிய ஒளி சக்தி மின் மோட்டார்கள் பயன்பாடு தொடர்பாக :விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்: ஆட்சியர் தகவல்

07/Aug/2021 08:14:16

புதுக்கோட்டை, ஆக:  புதுக்கோட்டை மாவட்டத்தில் PM-KUSUM திட்டத்தின் கீழ் சூரிய ஒளி சக்தியால் இயங்கும் மின் மோட்டார்களை  பயன்படுத்துவது தொடர்பாக  விவசாயிகளிடை யே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான திட்டம் வேளாண் பொறியியல் துறை, மின்சார துறை மற்றும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை ஆகிய துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்ட தகவல்: தமிழ்நாடு மின்வாரிய மின் வினியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட இலவச விவசாய மின் மோட்டார்களை சூரிய சக்தியின் மின் ஆற்றல் மூலமும் இணைத்து இயக்குதல் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் சோலார் மின் உற்பத்தியை பயன்படுத்திக் கொள்வதுடன், வருமானமும் ஈட்டி பலன் அடைய வழிவகை செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தில் மத்திய அரசின் மானியம் 30 % மும், மாநில அரசின் மானியம் 30%மும், விவசாயிகளின் பங்களிப்பு தொகையாக செலுத்த வேன்டிய 40% தொகையில் 30% தொகையை வங்கியிலிருந்து கடனாக வங்கியின் நடவடிக்கைகளுக்குட்பட்டு பெற்று விவசாயிகள் பயனடையலாம்.

மேலும், இத்திட்டத்தில் சோலார் பேனல் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின் உற்பத்திக்கு 1 யூனிட்டுக்கு  ரூபாய் 2.28ம் வீதம் ஒரு வருடத்திற்கு ரூ.33,858ம்,  ஊக்கத்தொகையாக ரூ.0.50 பைசா வீதம் வருடத்திற்கு ரூ.3,750 ம்  சேர்த்து தோராயமாக ரூ.40,000க்கு மேல் வருமானம் ஈட்டலாம் .

இத்திட்டத்தில் சேர ஆர்வமுள்ள விவசாயிகள் தங்கள் விருப்ப விண்ணப்பத்தினை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் உதவி  பொறியாளர் (த.எ.மே.மு) பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு 9385290525 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்லலாம்.


Top