logo
 ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  பேச்சு.

ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார்: சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேச்சு.

07/Aug/2021 01:20:28

புதுக்கோட்டை,ஆக.: ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தருவார் என சட்டம் மற்றும் நீதிமன்றங்கள் ஊழல் தடுப்புத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசினார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் புதுக்கோட்டை மாவட்டக்கிளையின் சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கும் விழா புதுக்கோட்டை வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில்  அண்மையில்  நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்டு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது:ஆசிரியர் பணி என்பது கைமாறு  கருதாமல் செய்யும் பணி ஆகும்.தங்களிடம் பயின்ற மாணவர்கள் உயர்ந்த நிலையில் இருக்கும் பொழுது அவர்களை பார்த்து பெருமைப்படும் ஒரே சமுதாயம் ஆசிரியர் சமுதாயம் தான்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் ,திராவிடர் முன்னேற்ற கழகமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்தவை.இரண்டுக்கும் தலைவர் டாக்டர் கலைஞர் தான்.மறைந்த பாவலர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாரிசாக தனது காலத்திலேயே அடையாளம் காட்டப்பட்டவர் தான் மன்றம் சண்முகநாதன்.

எனக்கு பின்னால் இந்த மன்றத்தை வழி நடத்தும் பொறுப்பு இவருக்கு தான் உண்டு என நிருபிக்கும் வகையில் மன்றம் என்ற உயரிய விருதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் கரங்களால் பாவலர் மீனாட்சி சுந்தரம் வழங்கி மன்றம் நா.சண்முகநாதனை அடையாளம் காட்டிச் சென்றுள்ளார்.கடந்த ஆட்சிக்காலத்தில் இழந்த ஆசிரியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றித்தருவார்கள் என்றார்.

விழாவில் சுற்றுச்சூழல் மற்றும்  விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசியதாவது:கடந்த பத்தாண்டுகளாக எதிர்கட்சித்தலைவராக இருந்து இன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்றார் அதற்குக் காரணம் ஆசிரியர்களாகிய நீங்கள் தான்.ஆசிரியர்களாகிய நீங்கள் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும்.ஆசிரியர் மன்றத்தின் சார்பில் மாவட்டக் கிளையின் சார்பில் வழங்கும் ரூ.40 இலட்சம் என்பது கிராமத்தில் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வசதி இல்லாத பொழுது அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சைபெற அவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்க,மருந்துகள் வழங்க பயன்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரக்காடுகள்,சீமைக் கருவேலை மரங்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.ஆசிரியர்களாகிய நீங்கள் பள்ளி வளாகங்களில் வெளிநாட்டு மரங்களை நடாதீர்கள்.அரசமரம் ,வேப்பமரம்,புங்கமரம் நடுங்கள்.ஆசிரியர்களாகிய நீங்கள் மாணவர்களிடம் பகுத்தறிவு கருத்துக்களை சொல்லிக் கொடுக்க வேண்டும் .எனது தமிழாசிரியர் எனக்கு அண்ணா,பெரியார்,கலைஞர் அவர்களின் கருத்துக்களை கூறியதால் அதை கேட்டு வளர்ந்த்தால்  தான் நான் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளேன் என்றார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவின் மூன்றாம் அலை தாக்காமல் இருக்க நாம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்,தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்றார்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது: கடந்த பத்தாண்டுகளாக கலைஞர் அவர்களால் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் இழந்தோம். அந்த நிலையை 10 ஆண்டுகளுக்கு பிறகு    தற்பொழுது தமிழக முதல்வராக உள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றிக் காட்டுவார்.

தமிழக முதல்வர் அவர்கள் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நல்லாட்சி புரிந்து கொண்டிருக்கிறார். தமிழக முதல்வர் அவர்கள் கொரோனா பரவல் நடவடிக்கைகளுக்கு உதவிட பொது நிவாரண நிதி வழங்க கேட்டுக் கொண்டுள்ளார்.அதன் காரணமாக தான் நாம் நமது தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் 2 கோடி வழங்க தீர்மானித்துள்ளோம்.

கொரோனா பரவல் முதல் அலையின் பொழுது நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் அளித்தோம்.இரண்டாவது அலையின் பொழுது ஒருநாள் ஊதியம் வழங்குவதாக குரல் கொடுத்தோம்.தற்பொழுது அதிகமான நிதியை வழங்கவும் உள்ளோம்.கடந்த ஆட்சிக்  காலத்தில் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் சரி செய்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.திராவிட முன்னேற்ற கழகமும்,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் இரண்டு கண்கள் போன்றது என்றார்.

முன்னதாக டாக்டர் கலைஞர், பாவலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர்கள் இருவரும் மலர் தூவி  மரியாதை செலுத்தினார்கள்.பின்னர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன்,சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் முன்னிலையில் முதலமைச்சர் நிவாரண நிதி ரூ .40 இலட்சம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதனிடம் வழங்கப்பட்டது.

விழாவில் தி.மு.க நகரச் செயலாளர் நைனா முகம்மது,நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு,வட்டச் செயலாளர் சத்யா,தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்டச் செயலாளர் க.சு.செல்வராஜ்,தலைவர் பெ.அழகப்பன்,பொருளாளர் சு.அங்கப்பன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.இரவிச்சந்திரன் மற்றும் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Top