logo
பள்ளிசெல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி :ஆக.10 -இல் தொடக்கம்

பள்ளிசெல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி :ஆக.10 -இல் தொடக்கம்

05/Aug/2021 04:06:04


புதுக்கோட்டை, ஆக: புதுக்கோட்டை மாவட்டத்தில்  பள்ளிசெல்லாக் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி வரும் 10 -ஆம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் வரும் 10.08.2021 முதல் 31.08.2021ஆம் தேதி வரை பள்ளிசெல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குடியிருப்புவாரியாக நடைபெறுகிறது.

மாவட்டத்தில் உள்ள 6 முதல் 19 வயது வரையிலான பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள், பள்ளிசெல்லாக் குழந்தைகள், இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும்  புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பற்றிய விவரங்கள் இக்கணக்கெடுப்பு பணியில் சேகரிக்கப்பட உள்ளன.

இக்கணக்கெடுப்பில் அனைத்து ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், இயன்முறை பயிற்சியாளர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், கிராமக் கல்விக்குழு உறுப்பினர்கள்  பங்கேற்க உள்ளனர். 

மேலும் இக்கணக்கெடுப்பை முதன்மைக்கல்வி அலுவலர் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர், உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர், புள்ளி இயல் அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கள், மேற்பார்வையாளர் (பொ) ஆகியோர் அடங்கிய குழுவினர் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. 

தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றி 9788858857 என்ற எண்ணிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை 9788858837 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம்.


Top