logo
ஆலங்குடி தொகுதியில் பொது மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

ஆலங்குடி தொகுதியில் பொது மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன:அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

25/Jul/2021 10:16:21

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் பொது மக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன என்றார்  சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை  (24.07.2021) துவக்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் மேலும் கூறியதாவது:  தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.  அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிட்டங்காடு கிராமத்தில் அருள்மிகு சித்திவிநாயகர் பாலமுருகன் கோவில் திருமண மண்டபத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள உணவு உண்ணும் கூடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

திருநாலூர் தெற்கு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 8-ஆம் வகுப்பு மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற தேசிய வருவாய் வழித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது. தேசிய வருவாய் வழித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4 மாணவிகளுக்கும் 8-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு மாதமும் தலா ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். 

மேலும் திருநாலூர் தெற்கு எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் ரூ.18.03 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சாலைப் பணிகளை துவக்கி வைத்தும், மாங்குடி ஊராட்சி, இடைவிரியேந்தல் கிராமத்தில்  ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அங்கன்வாடி கட்டடத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதே போன்று மாங்குடியில் நடைபெற்ற கோவிட் தடுப்பூசி முகாமும் துவக்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் பொதுமக்களின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.  ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று பேருந்து வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, கலையரங்கம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் தாமதமின்றி உடனுக்குடன்  நிறைவேற்றப்பட்டு வருகிறது. 


இதனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.  மேலும் பொதுமக்களின் ஏனைய கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று  அமைச்சர் .சிவ.வீ.மெய்யநாதன்  தெரிவித்தார்.

இதையடுத்து, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சிட்டங்காடு ஊராட்சி, பட்டத்தூரணி குளக்கரைக்கு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவர் மற்றும் படித்துரை அமைக்கும் பணி, அமரசிம்மேந்திரபுரம் பிள்ளையார் கோவிலுக்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கயைரங்கம் அமைக்கும் பணிக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார். அமரசிம்மேந்திரபுரம் முதல் ஆணையடிக்கொல்லை வரை செல்லும் இணைப்புச்சாலை ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டதை பொது மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.. மேலும் அருள்மிகு மகேஸ்வரி அம்மன் கோவில் அருகில் மரக்கன்றையும் நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு, மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம், அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, அசோகன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Top