logo
ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை

23/Jul/2021 11:57:58

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா பொருட்களை விற்கும் வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என  உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பான் மசாலா, குட்கா  கடைகளில் தாராளமாக கிடைத்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு பான் மசாலா, குட்கா இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள கடைகளில்  குட்கா, பான் மசாலா விற்பனை  நடைபெறுகிறதா? என்று சோதனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 

இதையடுத்து அனைத்து மாவட்டத்திலும் போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையரக உத்தரவு படியும், கலெக்டர் அறிவுரைப்படி, ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கருங்கல்பாளையம், கொல்லம்பாளையம் ,இந்திரா நகர் போன்ற பகுதிகளில் அனைத்து மளிகை பொருட்கள் மற்றும் இதர உணவு பொருள் விற்பனை செய்யும் கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக பிரிவு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் மேற்பார்வையில் அலுவலர்கள் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 5  கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம்  உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.

இது குறித்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் கூறியதாவது: 

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும். கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பொதுமக்களுக்கு  தெரிய வந்தால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.


Top