logo
கையிருப்பு இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில்   தடுப்பூசி முகாம்கள் ரத்து: மக்கள் ஏமாற்றம்

கையிருப்பு இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் ரத்து: மக்கள் ஏமாற்றம்

22/Jul/2021 11:54:52

ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் முகாம்கள் ரத்து செய்யப்பட்டன.

ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் இது வரை 5 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. அதன்படி, ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. 

இந்நிலையில், தடுப்பூசிகள் கை இருப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் முகாம்கள் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்று தடுப்பூசி போடப்படும் என்று எதிர்பார்த்து வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். குறிப்பாக கோவேக்சின் 2-ம் தவணை தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான மக்கள் காத்து கிடக்கின்றனர்.

Top