20/Jul/2021 12:14:37
திருச்சி, ஜூலை: தோழர் ப. ஜீவானந்தம் அவர்களால் 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பண்பாட்டுப் பேரியக்கம் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். இந்த மகிழ்வான தருணத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகளை 2021 ஆகஸ்டு முதல் 2022 ஜூன் வரை ஓராண்டு காலத்திற்கு நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் சி. சொக்கலிங்கம், பொதுச்செயலர் இரா. காமராசு, பொருளாளர் ப.பா. மணி ஆகியோர் வெளியிட்ட தகவல்:
தமிழ் மேன்மை, தமிழ் அடையாளம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுடன், பள்ளி வகுப்பறை தொடங்கி உயர் நீதிமன்றம் வரை அனைத்தும் தமிழால் முடியும் என்னும் பண்பாட்டுக் கனவுகளோடு மனிதகுல சமத்துவத்தை நோக்கியப் பயணத்தைத் தொடர்ந்து தமிழ்ச் சூழலில் முன்னெடுத்து வருகிற பேரியக்கம்.
ஜெயகாந்தன் தொடங்கி இன்றையத் தலைமுறை வரை ஏராளமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஓவியர்கள், மாணவ, மாணவிகள் இணைந்தும், இயங்கியும் வரும், இந்தப் பண்பாட்டுப் பேரியக்கம் இப்போது தனது 60-ஆவது வைரவிழா ஆண்டில் காலடி வைத்திருக்கிறது.
இப் பயணத்தில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், புதுச்சேரி மாநிலக் கலை இலக்கியப் பெருமன்றம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இன்னும் பல தோழமை அமைப்புகள் இணைந்து பயணிக்க இருக்கின்றன .
ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று தகுதியைப் பெறுபவர்களுக்கு தனித்தனி பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். ஓராண்டு காலத்தில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளின் முடிவில், எந்தக் கல்லூரியின் மாணவ, மாணவிகள் அதிகப் போட்டிகளில் வெற்றி பெறுகிறார்களோ அந்தக் கல்லூரிக்கு வைர விழா சுழற்கோப்பை வழங்கப்படும்.
அதிக போட்டிகளில் வென்று அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே வைர விழா விருதுகளும் வழங்கப்படும். இந்தக் கலை, இலக்கியப் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் பெறுகின்றன. மாநிலக் குழு மாணவர் போட்டிகளை ஹாமீம் முஸ்தபா, வெற்றிப்பேரொளி, ஆநிறைச்செல்வன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
வைரவிழா போட்டியின் முதல் தொகுப்பாக ஆகஸ்ட் 15- இந்திய ஒன்றியத்தின் விடுதலை நாளினை முன்னிட்டு பேச்சுப் போட்டியும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற நிறுவனர் தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் பிறந்த ஆகஸ்ட் 21-ஐ முன்னிட்டு கவிதை மற்றும் ஆய்வுக் கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகின்றன. கல்லூரி மாணவர்கள் திரளாகப் பங்கேற்றுப் பயன்பெற வேண்டுகிறோம்.
போட்டிகளுக்கான விதிமுறைகள்:
1. தமிழ்நாடு, புதுச்சேரியில் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இந்தப் போட்டிகளில் பங்கேற்கலாம்.
2. பேச்சுப் போட்டிக்கு வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதிக்குள், தங்களின் கல்லூரி அடையாள அட்டையைப் படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான வாட்ஸ்ஆப் எண்: 75988 49174, 94436 94122
3. பேச்சுப் போட்டிக்கான தலைப்பு:
மாநில சுயாட்சி- இந்திய ஒற்றுமையின் புதிய குரல்.
4. பேச்சுப்போட்டி ஆகஸ்ட் 15 அன்று காலை 10 மணி முதல் ஜூம் செயலி வழியே நடைபெறும். முன்பதிவு செய்தவர்களுக்கு அதற்கான இணைப்பு அனுப்பி வைக்கப்படும்.
5. ஒவ்வொரு போட்டியாளரும் 5 நிமிடம் பேசலாம்..
கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி
கட்டுரைக்கான தலைப்பு: செந்தமிழ் நாடிது - எங்கள் செந்தமிழ் நாடிது.
கவிதைக்கான தலைப்பு: தமிழ் எங்கள் உரிமை.
1. கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டால் 6 பக்கங்களுக்கு மிகாமலும், கையால் எழுதப்பட்டிருந்தால் 12 பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். கவிதை இரண்டு பக்கங்களுக்குள் அமைய வேண்டும்
2. கட்டுரை மற்றும் கவிதைகளை வீட்டில் இருந்தே எழுதலாம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள மாணவர் சுயவிவரக் குறிப்பைப் பூர்த்தி செய்து கட்டுரை மற்றும் கவிதையுடன் கட்டாயம் இணைத்து அனுப்ப வேண்டும்.
3. கவிதை மற்றும் கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி- ஆகஸ்ட் 19.
அனுப்ப வேண்டிய முகவரி:
கவிஞர் கோ. கலியமூர்த்தி, மாநிலத் துணைத் தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், எச்-சி 686, பகுதி- 1, அண்ணா நகர், திருச்சி- 620026, தொடர்பு எண்- 97151 85309.
--------------------------------------------------------------------------------------------------------------------
கவிதை மற்றும் கட்டுரையுடன் அனுப்ப வேண்டிய சுய விவரக் குறிப்பு
போட்டி : கவிதை அல்லது கட்டுரை.
மாணவர் பெயர் : xxxxxxxxxxxxxx
கல்வி பயிலும் விவரம்:xxxxxxxxxxxxx
கல்லூரி : xxxxxxxxxxxxxx
முழு தொடர்பு முகவரி: xxxxxxxxxxxxxxx
செல்லிடப்பேசி எண் : xxxxxxxxxxxxxx
மின்னஞ்சல் முகவரி : xxxxxxxxxxxxxxx
உறுதிமொழி
இந்தப் படைப்பு என்னால் இந்த வைர விழா போட்டிக்காகவே எழுதப்பட்டது என்பதை உறுதியளிக்கிறேன்.
மாணவர் கையெழுத்து
xxxxxxxxxxxxxxxxx
பேராசிரியர் அல்லது துறைத் தலைவர் கையெழுத்து