logo
ஆன்லைன் மூலம் கல்வி கற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது- தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஆன்லைன் மூலம் கல்வி கற்க மாணவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது- தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

03/Oct/2020 01:26:49

by ganasekar-pdk- புதுக்கோட்டை: ஆன்லைன் வகுப்பு வழியாக கல்வி கற்க மாணவர்களை பெற்றோர்களும் பள்ளி நிர்வாகங்களும்  கட்டாயப்படுத்தக் கூடாது என புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் அஸரப்அன்சாரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற  மாவட்ட தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர  தீர்மானங்கள் விவரம்: கொரானா தொற்றுநோய் பரவலை எதிர்த்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும்  மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் முன் களப்பணியாளர்களுக்கு  பாராட்டுத் தெரிவிப்பது.

இந்தக் கல்வியாண்டில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பது. ஆன்லைன் வகுப்பு வழியாக கல்வி கற்க மாணவர்களை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக் கூடாது. கடந்த கால கட்டண நிலுவை தொகை மற்றும் இந்த கல்வியாண்டின் 40 % கல்வி கட்டணம் பெறுவது தொடர்பான உயர்நீதி மன்ற தீர்ப்பை  பெற்றோர்கள் பொதுமக்களுக்கு அனைத்து ஊடகங்களும் கொண்டு சேர்க்க வேண்டுமென கேட்டுக் கொள்வது.

மாற்று சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை பிற பள்ளிகளில் சேர்க்கக் கூடாது. எமிஸ் (இ.எம்.ஐ.எஸ்) எண்ணை தனியார் பள்ளி நிர்வாக ஒப்புதல் இன்றி அரசு பள்ளிகளில் எடுப்பதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டம் 12(1) சி-இன் படி இந்தகல்வியாண்டில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் மீண்டும் மறுவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். 2019-20 கல்வி ஆண்டின் ஆர்.டி.இ கல்வி கட்டணம் நிலுவையை பள்ளிகள் திறக்காத  இந்த பேரிடர்  சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனே முழு தொகையையும் தவணையின்றி வழங்க வேண்டும்.

வருடந்தோறும் பெறப்படும் சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு சான்றிதழ் பெறுவதிலிருந்து இந்த கல்வியாண்டில் விலக்கு அளிக்க வேண்டும். டி.டி.சி.பி சான்று பெறுவதிலிருந்து நர்சரி பள்ளிகளுக்கு முழுவிலக்கு அளிக்க வேண்டும் .மேலும், நர்சரி பள்ளிகளை 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளை தரம் உயர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்படாததால் இயங்காத பள்ளி வாகனங்களுக்கு காப்பீடு மற்றும் சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்களிக்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து வகையான நலத்திட்ட உதவிகள், சலுகைகளைப் பெற தேவைப்படும்,ஜாதி,வருமானம் மற்றும் இருப்பிடச்சான்று பெறுவதில் நீடிக்கும் கால தாமத்தை கருத்தில் கொண்டு விண்ணப்பித்தவர்களுக்கு துரிதமாக ஆய்வு செய்து உடனடியாக சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வித்துறை சார்பாக கூட்டப்படும் கூட்டங்களின் தகவல்கள் ஒருநாள் முன்னதாக பள்ளிகளுக்கு முறையாக தெரிவிக்க வேண்டும். மேலும், பள்ளி நிர்வாகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு அலுவலர்களை நியமிக்கும்பொழுது அப்பணிகள் குறித்து முழுமையான விவரங்களையும் அறிந்த நபர்களையே நியமிக்க வேண்டும். பள்ளிகளிலிருந்து பெறப்படும் முக்கிய தகவகல்கள் குறித்த படிவங்களை அளித்த பின்னரும் மீண்டும் மீண்டும் கேட்கும் சங்கடமான சூழ்நிலையை இனிவரும் காலங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்திற்கு, கெளவரத்தலைவர்  சேகர், சக்திவேல்,டைமண்ட் பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எளிய முறையில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பது பற்றி லண்டன் லுக் பள்ளி நிர்வாகி டாக்டர். கிருஷ்ணமூர்த்தி  எடுத்துரைத்தார்.

  பள்ளி திறப்பது குறித்து தற்போது உள்ள சூழ்நிலையை ஒருங்கிணைப்பாளர் ரமணன் எடுத்துக் கூறினார்.  செயலாளர் முத்துகருப்பன் வரவேற்றார். நிறைவாக பொருளாளர் மேசியா சந்தோஷம் நன்றி கூறினார்.  ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகிகள் ராஜ்,கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். இதில், மாவட்டத்தின் பல்வேறு ஒன்றியங்களைச்சார்நத தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நல்லாசிரியர் விருது பெற்ற   குளத்தூர்  முத்துசுவாமி  மெட்ரிக் பள்ளி  சக்திவேலுக்கு   சங்க தலைவர் அஸரப் அன்சாரி  பொன்னாடை அணிவித்து பாராட்டினார் 

Top