12/Jul/2021 04:25:50
சென்னை, ஜூலை: ரஜினி மக்கள் மன்றமாக இயங்கி வந்ததை கலைத்துவிட்டதாகவும் ஏற்கெனவோ இருந்ததைப் போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக இயங்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னையில் திங்கள்கிழமை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அவர் நடத்திய ஆலோசனைக்கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன நிலை என்ன என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருக்கிறது அதை விளக்கவேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல பதவிகளையும், பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம். கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை.
வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகும் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.